345 ரன்களை அசாலட்டாக அடித்த பாகிஸ்தான்... உலக சாதனை சேஸிங் - இதுதான் உலகக் கோப்பை!!!

PAK vs SL: இலங்கை அணிக்கு எதிரான 345 ரன்கள் என்ற கடின இலக்கை 10 பந்துகள் மீதம் வைத்து பாகிஸ்தான் எட்டியது, உலகக் கோப்பை சேஸிங்கில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 10, 2023, 11:32 PM IST
  • ஆட்ட நாயகனாக ரிஸ்வான் தேர்வானார்.
  • இந்த போட்டியில் நான்கு சதங்கள் அடிக்கப்பட்டன.
  • பதிரானா 9 ஓவர்களில் 90 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
345 ரன்களை அசாலட்டாக அடித்த பாகிஸ்தான்... உலக சாதனை சேஸிங் - இதுதான் உலகக் கோப்பை!!! title=

ICC World Cup 2023, PAK vs SL: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் இன்று (அக். 10) இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. ஹிமாச்சல் பிரதேசம் தரம்சாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில், இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. இதில், இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது. 140 ரன்கள் அடித்த இங்கிலாந்து ஓப்பனர் டேவிட் மலான் ஆட்ட நாயகனாக தேர்வானார். 

தொடர்ந்து, ஹைதராபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை வெளியேற்றி, இலங்கை இறுதிப்போட்டி தகுதிபெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக, பாகிஸ்தான் அணி அதன் அடுத்த போட்டியில் இந்தியா உடன் மோத உள்ளதால், இந்த போட்டியும் முக்கியமான இடத்தை பிடித்தது.

இலங்கை அதிரடி பேட்டிங்

அதன்படி, டாஸ் வென்று இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, இலங்கை அணி 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் 122 ரன்களையும், சதீரா சமரவிக்ரம 108 ரன்களையும் அடித்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹசன் அலி 4 விக்கெட்டுகளையும், ஹரிஸ் ரவுஃப் 2 விக்கெட்டுகளையும், ஷதாப் கான் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மேலும் படிக்க | ENG vs BAN: படுதோல்விக்கு பிறகு மீண்டு எழுந்த இங்கிலாந்து! 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

அதன்படி, 345 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரிவர அமையவில்லை. இமாம் உல் ஹக், பாபர் அசாம் ஆகியோர் முதல் பவர்பிளேவிலேயே ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 37 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த ரிஸ்வானும், தொடக்க ஆட்டக்காரராக களம்கண்ட அப்துல்லா ஷஃபீக்கும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர்.  zeenews.india.com/tamil/sports/shubman-gill-hospitalized-in-chennai-due-to-sudden-medical-reason-see-full-details-here-467280

முதல் போட்டியிலேயே சதம்

இதில், ஷஃபீக்கிற்கு உலகக் கோப்பையில் முதல் போட்டியாகும். ஆனாலும், பாகிஸ்தான் அணி மீது இருந்த அழுத்தத்தை சிறிது கூட தன்மீது சுமதிக்கொள்ளலாம் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடி 176 ரன்களை எடுத்தபோது, ஷஃபீக் 113 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் அந்த ரன்களை 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 103 பந்துகளில் அடித்திருந்தார். 

முடித்துவைத்த ரிஸ்வான்

அடுத்து வந்த சவுத் ஷகீலும் ரிஸ்வானுக்கு துணையாக நின்றார். ரிஸ்வானும் சதம் கடந்த நிலையில், வீசப்பட வேண்டிய பந்துகளும், எடுக்கப்பட வேண்டிய ரன்களும் ஒரே கட்டத்தை எட்டின. இறுதிகட்ட ஓவரில் ஷகீல் அவுட்டானாலும், அடுத்து வந்த இஃப்தீகாரும் அதிரடியை கைக்கொண்டார். அதன்மூலம், 48.2 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி இலக்கை அடைந்து, நடப்பு உலகக் கோப்பையில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.  

மேலும் படிக்க | கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல... உலகக் கோப்பையில் சுப்மன் கில் போல் அவதிப்படும் 6 வீரர்கள்!

பந்துவீச்சில் சொதப்பிய இலங்கை

ரிஸ்வான் 121 பந்துகளில் 8 பவுண்டரிகள், சிக்ஸர்களுடன் 131 ரன்களுடனும், இஃப்திகார் 10 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடித்து 22 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர். மதுஷங்கா 2 விக்கெட்டுகளையும், தீக்ஷனா, பதிரானா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இருப்பினும் அனைவரும் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக, பதிரானா 9 ஓவர்களை வீசி 90 ரன்களை கொடுத்தார்.  

சேஸிங்கில் வரலாற்று சாதனை

மேலும் உலகக் கோப்பை வரலாற்றிலேயே இதுதான் அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங் ஆகும். இதற்கு முன், 2011ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி 328 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்ததுதான் சாதனையாக இருந்தது. 

ஒரே போட்டியில் 4 சதம்

மேலும், இன்றைய போட்டியில் இலங்கை அணி சார்பில் குஷால் மெண்டிஸ், சதிரா சமரவிக்ரம மற்றும் பாகிஸ்தான் அணி சார்பில் ஷஃபீக், ரிஸ்வான் என நான்கு பேர் சதம் அடித்து மிரட்டினர். ஆட்ட நாயகனாக ரிஸ்வான் தேர்வானார். 

புள்ளிப்பட்டியல்

இதுவரை 8 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் முறையே முதல் நான்கு இடத்தில் உள்ளன. இங்கிலாந்து, வங்கதேசம் அணிகள் முறையே 5ஆவது, 6ஆவது இடத்தில் உள்ளன. ஆஸ்திரேலியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் முறையே 7, 8, 9, 10ஆவது இடத்தில் உள்ளன.

மேலும் படிக்க | ஆப்கான் போட்டியில் அஸ்வினுக்கு பதில் இவர்... ஈஸி வெற்றி இந்தியாவுக்குதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News