இந்திய அணிக்கு பயம்காட்டிய அயர்லாந்து அணிக்கு குவியும் பாராட்டு

20 ஓவர் தொடரை இந்திய அணி வென்றிருந்தாலும், பயம்காட்டிய அயர்லாந்து அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 29, 2022, 08:51 AM IST
  • அயர்லாந்து தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி
  • 2வது போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி
  • இந்தியாவுக்கு கடைசி வரை பயம்காட்டிய அயர்லாந்துக்கு பாராட்டு
இந்திய அணிக்கு பயம்காட்டிய அயர்லாந்து அணிக்கு குவியும் பாராட்டு title=

அயர்லாந்து சுற்றுப் பயணத்தில் இருக்கும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியின் இளம்படை அந்நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் போட்டியில் சிறப்பான வெற்றியைப் பெற்ற இந்திய அணி, நேற்று அந்த தெம்புடன் 2வது போட்டியில் களமிறங்கியது. அயர்லாந்து அணியும் முதல் போட்டியில் சவாலாக தான் விளையாடினோம் என்ற மனத் திருப்தியுடன் இந்திய அணியை எதிர்கொண்டது. டப்ளினில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வெற்றிபெற்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

மேலும் படிக்க |  இந்திய அணியை பதற வைத்த அயர்லாந்து ’பாண்டியா’ ஹாரி டெக்டர்

தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். வாய்ப்பை தவறவிட்டுவிடக்கூடாது என்ற நெருக்கடியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாட, மறுமுனையில் இருந்த இஷான் கிஷன் 3 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அடுத்துவந்த தீபக்ஹூடா, சஞ்சு சாம்சனுடன் கூட்டணி அமைக்க, இருவரும் அயர்லாந்து அணியின் பந்துவீச்சில் வாண வேடிக்கை காட்டினர். சிக்சரும் பவுண்டரிகளுமான பந்துகள் எல்லைக்கோட்டுக்கு பறந்தது. 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஞ்சு சாம்சன் அவுட்டாகி வெளியேறினார். அந்தபக்கம் இதுதான் சமயம் என்று உணர்ந்த ஹூடா அதிரடியாக விளையாடி முதல் சர்வதேச 20 ஓவர் போட்டி சதத்தை நிறைவு செய்தார். 57 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். இதில் 6 மெகா சிக்சர்களும் அடங்கும்.

தீபக் ஹூடா அடித்த ஒரு பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றதெல்லாம் ரசிகர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பின்வரிசையில் பாண்டியா 13 ரன்கள் எடுக்க, தினேஷ்கார்த்திக், ஹர்ஷல் படேல், அக்சர் படேல் என மூவரும் கோல்டன் டக்அவுட்டாகி வெளியேறினர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. இந்த இலக்கையெல்லாம் அயர்லாந்து அடிக்குமா? என்றுதான் இந்திய அணியினர் உள்ளிட்ட கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் ஆட்டம் களத்தில் வேறாக இருந்தது. ஒருகட்டத்தில் பயத்த காட்டிட்டாங்க பரமா! என்ற நிலைக்கெல்லாம் இந்திய அணி சென்றது கண்கூடாக பார்க்க முடிந்தது. 20 ஓவரை உம்ரான் மாலிக் வீசி முடித்த பிறகே இந்திய அணிக்கு அந்த பயம் சென்றது.  

அந்தளவுக்கு அதிரடியில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டிவிட்டனர் அயர்லாந்து அணியினர். ஓப்பனிங் இறங்கிய பால் ஸ்டிர்லிங் மற்றும் கேப்டன் பால்பிரைனி ஓப்பனிங் இறங்கி அதிரடியாக வெளுத்து வாங்கினர். 18 பந்துகளில் 40 எடுத்து அவுட்டானார் ஸ்டிர்லிங். கேப்டன் பால்பிரைனி 37 பந்துகளில் 60 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தார். அடுத்து வந்த வீரர்களும் சிறப்பாகவே விளையாடினர். ஃபார்மில் இருக்கும் ஹாரி டெக்டேர் 39 ரன்கள் எடுக்க, ஜார்ஜ் டாக்ரெயில் அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். மறுமுனையில் இருந்த மார்க் அடையரும் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தார். 

கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை அயர்லாந்து அணிக்கு இருந்தது. அந்த ஓவரை இந்தியாவின் சோயிப் அக்தராக பார்க்கப்படும் உம்ரான் மாலிக் வீச வந்தார். கடைசி 3 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்தபோது, அற்புதமாக பந்துவீசி வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அசத்தினார். அவரின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரைக் கைப்பற்றியது. இந்திய 20 ஓவர் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரையும் வென்று அசத்தியிருக்கிறார் ஹர்திக் பாண்டியா. எது எப்படி இருந்தாலும், பலம் வாய்ந்த இந்திய அணிக்கு பயம்காட்டிய அயர்லாந்து அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.  

மேலும் படிக்க | களத்தில் அத்துமீறிய ரசிகர்கள்- விராட் கோலி கொந்தளித்த வீடியோ வைரல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News