IND vs WI: இந்தியாவின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கப்போகிறது...? யார் யாருக்கு வாய்ப்பு?

IND vs WI: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 27) நடைபெற உள்ள நிலையில், அதில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் வீரர்கள் யார் யார் என்பது குறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jul 27, 2023, 10:37 AM IST
  • விக்கெட் கீப்பராக யாரை எடுக்க இருக்கிறார்கள் என்ற கேள்வி உள்ளது.
  • ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பளிக்கப்படுமா எனவும் எதிர்பார்ப்பு.
  • சிராஜ் தலைமையில் பந்துவீச்சு படை களமிறங்குகிறது.
IND vs WI: இந்தியாவின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கப்போகிறது...? யார் யாருக்கு வாய்ப்பு? title=

IND vs WI, 1st ODI: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை, இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியை இந்தியா வென்றதை அடுத்து, இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. 

டெஸ்ட் தொடரை தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன. அனுபவ வீரர்கள், இளம் வீரர்கள் என கலவையாக காணப்படும் இந்திய அணி வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்த தொடரை அணுக உள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி, பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.  

பேக்-அப் வீரர்கள்

ஷ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், ஜஸ்பிரித் பும்ரா என ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் அணிக்குள் வரும்போது இந்திய அணி பலம் பெறும் என்றாலும், பேக் அப் வீரர்களை தயார் செய்வதும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களுக்கு அவசியமாகிறது. எனவே, இந்த மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் வலுவான பேக்-அப் வீரர்களை கண்டடைய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வலுவாக காணப்படும் டாப்-ஆர்டர்

குறிப்பாக, ஓப்பனிங்கில் ஷிகார் தவாண் ஓரங்கட்டப்பட்ட பின் ரோஹித் சர்மாவுடன், சுப்மான் கில் தான் களமிறங்குகிறார். இந்திய மண்ணில் ஜொலித்த கில், கடைசி 2 டெஸ்ட்களிலும் பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை. இருப்பினும், மீண்டும் அவரின் ஃபார்மை கையிலெடுத்தால் இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுவாகும். 

அதன்பின், வழக்கமாக விராட் கோலியும், ஷ்ரேயஸ் ஐயரின் நான்காவது இடத்தில் சூர்யகுமார் யாதவும் களமிறங்கவே வாய்ப்பு இருக்கிறது. ஆல்-ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோரும் பந்துவீச்சில் சிராஜ், சஹால் ஆகியோரும் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பது உறுதியாக தெரிகிறது. மீதம் இருக்கும் உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், ஜெயதேவ் உனத்கட், முகேஷ் குமார் ஆகியோரில் யார் யாரை அணிக்குள் சேர்ப்பார்கள் என்பது கேள்வியாக உள்ளது. 

மேலும் படிக்க | அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் கோலிக்கு 2வது இடம்! முதல் இடத்தில் யார் தெரியுமா?

KULCHA ஜோடிக்கு வாய்ப்பில்லை

ஜடேஜா, சஹால் ஆகியோர் சுழற்பந்துவீச்சில் இருக்கும்போது மூன்றாவது சுழற்பந்துவீச்சாளருக்கு பதில் ஒரு வேகப்பந்துவீச்சாளரை சேர்க்கவே இந்திய அணி திட்டமிடும். அந்த வகையில், குல்தீப் யாதவ் அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பு குறைவு. அப்படியிருக்கும்பட்சத்தில், ஒரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் வேண்டும் எனும்போது உனத்கட்டையும், கூடுதல் பேட்டிங் ஆப்ஷனாக ஷர்துல் தாக்கூரையும் எடுக்கலாம் என வல்லுநர்கள் கணிக்கின்றனர். 

அந்த இரண்டு இடம்

இருப்பினும், இந்தியாவின் வேகப்புயல் உம்ரான் மாலிக்கையும் இந்தியா முயற்சித்து பார்க்கலாம் எனவும் தெரிகிறது. எனவே, மீதம் இருக்கும் இரண்டு பந்துவீச்சாளர்கள் இடத்தை யாரைக் கொண்டு நிரப்பப்போகிறார்கள் என்ற கேள்வி மேலோங்கி இருக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு, ஆல்-ரவுண்டர் என அனைத்தும் சுமுகமாக முடிந்தாலும், விக்கெட் கீப்பர் பேட்டராக யாரை களமிறக்கப்போகிறார்கள் என்ற கேள்வி தான் முதன்மையாக உள்ளது. 

ரோஹித் - ராகுல் ஜோடிக்கு கூடுதல் தலைவலி

நீண்ட காத்திருப்புக்கு பின் சஞ்சு சாம்சன் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். இஷான் கிஷன் டெஸ்ட் தொடரிலும் இடம்பிடித்திருந்தார். எனவே, இவர்களில் யாரைக்கொண்டு ஐந்தாவது பேட்டிங் ஸ்லாட்டையும், விக்கெட் கீப்பங்கையும் இந்திய அணி நிரப்பப்போகிறது எனவும் எதிர்பார்ப்பு உள்ளது. நான்காவது இடத்தில் சூர்யகுமார் பொருந்தவில்லை என அணி நினைக்கும்பட்சத்தில், அவர் வெளியே அமரவைத்து சஞ்சு சாம்சனை 4ஆவது வீரராகவும், இஷானை விக்கெட் கீப்பிங் பேட்டராக இந்திய அணி பயன்படுத்த நினைக்கலாம். ஆனால், சூர்யகுமாரை வெளியே அமரவைப்பது அவ்வளவு எளிதல்ல. எனவே, ரோஹித் - ராகுல் ஜோடிக்கு ஒருநாள் அணிக்கு ஏற்ற பிளேயிங் லெவனை தீர்மானிப்பது சற்று தலைவலியை கொடுக்கலாம். 

எங்கு, எப்போது காண்பது?

முதல் ஒருநாள் போட்டி இன்றும் (ஜூலை 27), இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டி முறையே ஜூலை 29ஆம் தேதியும், ஆக. 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதில் முதலிரண்டு போட்டி பார்படாஸிலும், மூன்றாவது போட்டி மட்டும் டிரினிடாட்டிலும் நடக்கிறது. அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும். இதனை இந்திய பார்வையாளர்கள் ஜியோ சினிமாஸ் செயலியில் இலவசமாகவே காணலாம். 

ஸ்குவாட்

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜெயதேவ் உனத்கட், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார். 

மேற்கு இந்திய தீவுகள் அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), ரோவ்மேன் பவல் (துணை கேப்டன்), அலிக் அதானஜ், யானிக் கேரியா, கேசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோதி, ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், கெவின் சின்க்ளேர், ஓஷேன் தாமஸ்..

மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி தேதி மாற்றம்...? பிரச்னை இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News