FIFA World Cup 2022 : முதல் நாளிலேயே சூடுபிடித்த தொடர்... ரசிகர்கள் மோதல் - கத்தார் படைத்த மோசமான சாதனை

பிபா உலகக்கோப்பை தொடரின் தொடக்க போட்டியில், ஈக்டவார் அணி முன்னிலையில் இருந்தபோது, உள்ளூர் கத்தார் அணி ரசிகர்களுக்கும், ஈக்வடார் அணி ரசிகர்களுக்கும் மைதானத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் வீடியோவும் வைரலாகி வருகிறது.  

Written by - Sudharsan G | Last Updated : Nov 21, 2022, 08:35 AM IST
  • ஈக்வடார் கேப்டன் வலென்சியா 2 கோல்களை அடித்தார்.
  • 2-0 என்ற கணக்கில் தொடரை நடத்தும் கத்தாரை வீழ்த்தியது ஈக்வடார்.
  • 92 ஆண்டுகால பிபா உலகக்கோப்பை வரலாற்றில் ஈக்வடார் புது சாதனை.
FIFA World Cup 2022 : முதல் நாளிலேயே சூடுபிடித்த தொடர்... ரசிகர்கள் மோதல் - கத்தார் படைத்த மோசமான சாதனை title=

பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் மத்திய கிழக்காசிய நாடான கத்தாரில் கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று (நவ. 20) கோலாகலமாக தொடங்கியது. உலக புகழ்பெற்ற BTS இசைக்குழு பாடகர் ஜங் குக் நேற்றைய தொடக்க விழா போட்டியில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

கத்தாரின் அல்கோரில் உள்ள அல் பேட் மைதானத்தில் நடந்த இந்த கலைநிகழ்ச்சிகளை தொடர்ந்து, தொடரின் முதல் போட்டியாக குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள தொடரை நடத்தும் கத்தார் அணியும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஈக்வடார் அணியும் மோதின. இந்த போட்டியின் ஆரம்பத்தில் இருந்த ஈக்வடார் அணி தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது. 

மேலும் படிக்க | FIFA world cup 2022 : ஆபாச படம், செக்ஸ் டாய்ஸ், பீர்... நீளும் தடை பட்டியல்களும், நிபந்தனைகளும்!

வெல்டன் வலென்சியா!!

ஆட்டம் ஆரம்பித்த 3ஆவது நிமிடத்தில்,  ஈக்வடார் அணி கேப்டன் என்னர் வலென்சியா கோல் அடித்து அசத்தினார். சக வீரர் ஃபெலிக்ஸ் டோரஸ் கொடுத்த பாஸை, தலையால் தள்ளி கோலை அடித்தார். இருப்பினும், அது ஆஃப்-சைட் என அறிவிக்கப்பட்டதால் கோல் ரத்தானது, குதூகலத்தில் இருந்த ஈக்வடார் ரசிகர்களுக்கு அது சற்று ஏமாற்றத்தை அளித்தது. 

இருப்பினும், போட்டியின் 16ஆவது நிமிடத்திலேயே கிடைத்த ஒரு ஃபெனால்டி கிக் வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி, ஈக்வடார் கேப்டன் வலென்சியா நடப்பு உலகக்கோப்பையின் முதல் கோலை பதிவு செய்தார். கத்தார் கோல்-கீப்பர் ஷீப், வலென்சியாவுக்கு விதிமுறையை மீறி இடையூறு விளைவித்ததால் இந்த பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது.

வாய்ப்பை வீணடித்த கத்தார்

இதையடுத்து, போட்டியின் 31ஆவது நிமிடத்தில் மற்றுமொரு கோலை அடித்து, கேப்டன் வலென்சியா மிரட்டினார். சக நாட்டு வீரர் ஏஞ்சலோ பிரிசியாடோ கொடுத்த அற்புதமான கிராஸ் பாஸை, தலையால் தட்டி வலென்சியா அந்த கோலை பெற்றார். இதுவும் ஆஃப்-சைடா என்று சரிப்பார்க்கப்பட்டது. 

இருப்பினும், முடிவு ஈக்வடாருக்கு சாதகமாகவே வந்தது. முதல் பாதி ஆட்டம் நிறைவுபெற இருந்த நேரத்தில், கோல் அடிக்க கிடைத்த அற்புதமான வாய்ப்பை கத்தார் நாடு வீணடித்தது.

மேலும் படிக்க | FIFA World Cup 2022 : கால்பந்து உலகக்கோப்பையை எதில், எப்படி பார்ப்பது?

வாயை மூடச் சொல்லிய உள்ளூர் ரசிகர்

முதல் பாதியில் 2 கோல் அடித்து முன்னிலை பெற்ற ஈக்வடார், இரண்டாம் பாதியில் தடுப்பாட்டத்தை கைக்கொண்டது. எனவே, இரண்டாம் பாதியில் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் கத்தார் அணி சற்று சிறப்பாகவே விளையாடினாலும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.  இதன்மூலம், 2 - 0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை வீழ்த்தி ஈக்வடார் அணி தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இதில், கத்தார் தரப்பில் நான்கு வீரர்களும், ஈக்வடார் தரப்பில் இரண்டு வீரர்களும் நடுவர்களிடம் இருந்து முதல் எச்சரிக்கை கார்டான மஞ்சள் அட்டையை பெற்றனர். மேலும், முட்டியில் ஏற்பட்ட காயத்தால் கேப்டனும், நேற்றைய போட்டியின் நாயகனுமான வலென்சியா களத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, ஈக்வடார் முன்னிலை பெற்று களத்தில் சூடுபறந்துகொண்டிருந்த வேளையில், பார்வையாளர்கள் மத்தியிலும் கடும் சலசலப்பு நிலவியது. தங்கள் அணி முன்னிலை பெற்றிருப்பதை, ஈக்வடார் ரசிகர் ஒருவர் கூச்சலிட்டு கொண்டாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த கத்தார் நாட்டு உள்ளூர் ரசிகர்கள் அவர்களை வாயை மூடிக்கொண்டு அமருமாறு சைகையில் கூற அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. 

92 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக...

இதன் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. கால்பந்து மைதானத்தில் இதுபோன்ற சலசலப்புகள் இயல்பு. முதல்முறையாக பனிக்காலத்திலும், அதுவும் அரேபிய நாட்டில் நடக்கும் இந்த தொடரும் முதல் நாளில் இருந்தே சூடுபிடித்திருப்பது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

மேலும், 92 ஆண்டு பிபா கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில், தொடக்க போட்டியில் முதல்முறையாக தொடரை நடத்தும் அணி தோல்வியடைந்துள்ளது. கத்தார் அணியை வீழ்த்தியதன் மூலம், ஈக்வடார் அணி 92 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த பெருமையை பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | உலக கோப்பை கால்பந்து போட்டிகளை காண ரூ.23 லட்சத்துக்கு வீடு வாங்கிய கேரள ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News