காவிரி விவகாரம்: தி.மு.க சார்பில் போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தவறினால், மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ஈரோட்டில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated : Mar 26, 2018, 07:11 AM IST
காவிரி விவகாரம்: தி.மு.க சார்பில் போராட்டம்!  title=

தி.மு.க-வின் ஈரோடு மண்டல மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. 2-ம் நாள் மாநாடு நேற்று காலை இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மேடையில் அமர்ந்து இருந்தனர். கட்சியின் பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். பகல் 11 மணி அளவில் மாநாட்டு சிறப்பு தீர்மானத்தை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாசித்தார். 

அந்த தீர்மானம் வருமாறு.தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினையான காவிரி நதிநீர் உரிமைக்காக தி.மு.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழகத்தின் முதல்- அமைச்சராகவும், இந்திய பிரதமராக வி.பி.சிங் இருந்தபோதும்தான் காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது.

தலைவர் கருணாநிதியின் வலியுறுத்தலை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு, இறுதி தீர்ப்பு ஆகியவை கிடைப்பதற்கு தி.மு.க. தலைமையிலான அரசு தொடர்ந்து பாடுபட்டதுடன் அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை மேம்படுத்தி காவிரி டெல்டா விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிவிடாதபடி காவிரி நீர் கிடைப்பதற்கு தொடர்ந்து ஆவன செய்தது.

நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் தெரிவித்து உள்ளபடி காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் உருவாக்கப்படுவது கட்டாயம் என கூறி காலக்கெடுவும் விதித்துள்ளது சுப்ரீம் கோர்ட்டு. அந்த தீர்ப்பை துச்சமென மதித்து தமிழ்நாட்டை மேலும் வஞ்சித்திடும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், ஏதேதோ சொல்லி காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு.

தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அ.தி.மு.க. தலைமையிலான மைனாரிட்டி அரசு, மத்திய ஆட்சியாளர்களுக்கு தீவிரமான அரசியல் அழுத்தம் கொடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், இந்த பிரச்சினையில் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தி.மு.க., மாநில அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வாரி வழங்கி வருகிறது.

இந்த நிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டு அளித்து உள்ள தீர்ப்பையும் சிறிதும் பொருட்படுத்தாமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பதில் 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற குழுவை அமைக்க மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பது, தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை முற்றிலுமாக பறித்து முறித்துப்போடுகின்ற பகிரங்கமான எதிர்மறை செயலாகும்.

தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராகவும், வாஜ்பாய் இந்திய பிரதமராகவும் இருந்தபோது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் காவிரி நதிநீர் ஆணையம் என்கிற அமைப்பு பிரதமர் தலைமையில் உருவாக்கப்பட்டது. அப்போது, அதனை பல் இல்லாத ஆணையம் என்று கேலியும், கிண்டலும் செய்தவர் அப்போது அ.தி.மு.க.வில் தலைமை பொறுப்பில் இருந்த ஜெயலலிதா என்பதை விவசாய பெருமக்கள் மறந்து விடவில்லை.

இன்று நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியாகி அதனை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்த நிலையில் அவை அனைத்தும் நீர்த்துப்போகும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதில், காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்பட உள்ளது. இது பல் இல்லாதது மட்டுமல்ல, உயிரற்ற ஒன்றை மத்திய அரசு கர்நாடக தேர்தல் லாபம் என்ற குறுகிய அரசியல் நோக்கில் உருவாக்க முனைகிறது.

இந்த பச்சை துரோகத்தை எதிர்த்து நின்று மேற்பார்வை ஆணையத்தை நிராகரித்து மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டே ஆக வேண்டும் என்பதில் அ.தி.மு.க. அரசு அழுத்தமான உறுதி காட்ட வேண்டும்.

காவிரி நதிநீர் பிரச்சினையில், மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக வேறு எந்த அமைப்பையும் ஏற்கமாட்டோம். சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு மத்திய அரசிடம் எல்லா வகையிலும் வலியுறுத்த வேண்டும்.

மாநில உரிமைகளை தொடர்ந்து பறிகொடுத்து வரும் அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டின் உயிர் ஆதார பிரச்சினையான காவிரி விவகாரத்திலும், நமது உரிமைகளை விட்டுக்கொடுத்து தெண்டனிட்டுக் கிடந்தால், தமிழக விவசாயிகளையும், பொதுமக்களையும் திரட்டி தி.மு.க கடுமையான போராட்டக்களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என இந்த மாநாடு மத்திய-மாநில ஆட்சியாளர்களை இறுதியாக எச்சரிக்கிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

அப்போது மாநாட்டு அரங்கில் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் கரவொலி எழுப்பி தீமானத்துக்கு தங்கள் ஒப்புதலை அளித்தனர்!

Trending News