மம்தாவின் தர்ணா போராட்டத்தால் பாராளுமன்ற இரு அவைகளும் முடங்கியது

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தால் இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 4, 2019, 03:16 PM IST
மம்தாவின் தர்ணா போராட்டத்தால் பாராளுமன்ற இரு அவைகளும் முடங்கியது title=

சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ அதிகாரிகள் நேற்று கொல்கத்தா கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்திய பின்னர் தான் சிபிஐ அதிகாரிகளை விடுவித்தனர்.

இதுக்குறித்து ஆலோசனை செய்த முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளார் எனக்கூறிய மம்தா பானர்ஜி நேற்று இரவு தர்ணாவை தொடங்கினார். இதில் கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரும் பங்கேற்றார். நேற்று இரவு தொடங்கப்பட்ட இந்த தர்ணா இன்றும் நீடிக்கிறது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர். 

மம்தாவுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தால் இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அவை தொடங்கிய முதலே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவை தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் மீண்டும் அவை கூடியது. மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

Trending News