ஓணம் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து!

Last Updated : Sep 4, 2017, 02:42 PM IST
ஓணம் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து! title=

ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்திய நாட்டின் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்:

இன்று ஓணம் பண்டிகை கொண்டாடும் நாட்டு மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக கேரளாவை சேர்ந்த சகோதர-சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

விவசாய தொழிலாளர்களின் கடுமையான உழைப்புக்கு பின் கிடைத்த அறுவடைகாலத்தை ஓணம் பண்டிகையாக கொண்டாடுகிறோம். இந்த ஓணம் பண்டிகையையொட்டி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவேண்டும். சமுதாயத்தில் சமாதானத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் உழைக்கும் அனைவருக்கும் இதனை தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி:

‘ஓணம் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்னாளில் அனைவரின் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்’ என்று தெரிவித்து உள்ளார். 

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்:

ஓணம் திருநாள் என்பது அறுவடை திருநாளாகவும், பக்தி, வீரம், அன்பு, பெருந்தன்மை ஆகிய நல்ல குணங்களால் அறியப்படும் மகாபலி மன்னன் மக்களைப் பார்க்க வரும் நாளாகவும் கருதப்படுகிறது. இந்த ஓணம் நாளில் சகோதரத்துவம் வலுவடைந்து தேச ஒற்றுமை வளர வேண்டும். உலகம் முழுவதும் வாழும் மலையாள மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு இனிய ஓணம் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: 

சாதி, சமய பேதமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் சமத்துவத்துடன் ஒற்றுமையாக கொண்டாடப்படும் ஓணம் திருநாளில் உலகில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் உயர்ந்து தழைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

சாதி, மத, பாகுபாடின்றி அனைவரும் ஒன்று கூடி ஓணம் பண்டிகை கொண்டாடுகின்றனர். இந்த ஓணம் நன்னாளில் கேரள மக்கள் அனைவரும் எல்லா நலனும் வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் என்று நல்வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

மக்களைக் காண வருகை தரும் மகாபலி மன்னனை வரவேற்பதற்காக திருவோணம் திருநாளைக் கொண்டாடும், தமிழகம் உட்பட உலகம் முழுவதும் வாழும் மலையாள மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: 

அன்புக்கும் கொடைக்கும் அடையாளமான ஓணம் திருநாளைக் கொண்டாடும், மலையாள மொழி பேசும் கேரள மக்கள் எல்லா வளமும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்:

மலையாளத்து சகோதர, சகோதரிகளுக்கு ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய சிந்தனையுடன் அனைத்து மொழி சகோதரர்களும், சகோதரிகளும் ஒன்றாக நம் தேச எண்ணத்தோடு முன்னேறும் போது இந்த நாடு ஒட்டு மொத்த வளர்ச்சியைப் பெறும்.

தேச ஒற்றுமையுடன் நேசத்துடன் கேரளத்து சகோதர சகோதரிகள் அனைத்து இன்பங்களும் பெற இந்த ஓணம் பண்டிகை வழி வகுக்கட்டும்.

Trending News