பிரான்ஸிடம் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா கையொப்பமிட்டது

Last Updated : Sep 23, 2016, 01:45 PM IST
பிரான்ஸிடம் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா கையொப்பமிட்டது title=

தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனம் பிரான்ஸில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திடம் இருந்து 126 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா விரும்பியது. பல்வேறு பிரச்சினைகளால் கடந்த 3 வருடங்களாக இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருந்து வந்தது. 

கடந்த ஆண்டு பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டின் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேயை சந்தித்து இந்தியா நடுத்தரமானதும், பன்முக பயன்பாடு கொண்டதுமான 36 போர் விமானங்களை, பறக்கும் நிலையில் வாங்குவதாக உறுதி அளித்தார்.

ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தமானது கடந்த மே மாத இறுதியில் நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விமானத்தின் விலையை குறைப்பது தொடர்பாக பிரான்சிடம் இந்தியா பேசிவந்தது.

இதையடுத்து, தற்போது பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 7.84 பில்லியன் யூரோக்கள் விலையில் 36 நவீனரக ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா இன்று கையொப்பமிட்டது.

36 மாதங்களில் இருந்து 66 மாதங்களுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள இந்த 36 ரபேல் போர் விமானங்களும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை சுமந்தபடி பாய்ந்துச் சென்று எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆற்றல் மிக்கதாகும்.

இந்தப் போர் விமானங்கள் இந்திய விமானப்படையின் தேவைக்கேற்ப வடிவமைத்து தரவும் பிரான்ஸ் நாட்டின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனம் இன்றைய ஒப்பந்தத்தில் சம்மதித்துள்ளது.

 

 

Trending News