போர் நிறுத்தத்தை மீறி சிரியா அரசு வான்வழி தாக்குதல்: 34 பேர் பலி!

சிரியாவில் போர் நிறுத்தத்தை மீறிக் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சிரியா விமானத் தாக்குதலை மேற்கொண்டது. இதில் 34 பொது மக்கள் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Last Updated : Mar 5, 2018, 08:40 AM IST
போர் நிறுத்தத்தை மீறி சிரியா அரசு வான்வழி தாக்குதல்: 34 பேர் பலி! title=

சிரியாவில் 2012 முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இருப்பினும், இரண்டு வாரங்களாகக் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் வசிக்கும் இடங்களின் மீது சிரியா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. 

இதில், அப்பாவி பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்து உலகமே கலங்கியது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாகத் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

ஆனால், போர் நிறுத்தத்தை மீறி சிரியா இன்று, டமாஸ்கஸ்சுக்கு அருகில் உள்ள கிளர்ச்சியாளர்கள் நிறைந்த கிழக்குக் கூட்டா பகுதியில் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 11 குழந்தைகள் உள்பட 34 பேர் கொல்லப்பட்டதாகச் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 15 நாட்களாக இந்தப் பகுதியில் நடந்துவரும் தாக்குதலில் இதுவரை 690 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தலைநகர் டமாஸ்கஸ்சுக்கு அருகில் உள்ள பகுதி என்பதால் அதை எப்படியும் கிளர்ச்சியாளர்களிடமிருந்து கைப்பற்றிவிட வேண்டும் என்று அதிபர் ஆஸாத் நினைக்கிறார். இதனால், அந்தப் பகுதியில் தாக்குதல் தொடர்கிறது. குறிப்பிட்ட அளவு பகுதியை இந்தத் தாக்குதலின் மூலம் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

சிரியா, ரஷ்யா கூட்டுப்படையின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Trending News