அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு ஏற்க முடியாது -ராமாதாஸ்!

தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாது என இந்திய தபால் துறை அறிவித்துள்ள நிலையில், அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு ஏற்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jul 13, 2019, 01:16 PM IST
அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு ஏற்க முடியாது -ராமாதாஸ்! title=

தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாது என இந்திய தபால் துறை அறிவித்துள்ள நிலையில், அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு ஏற்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது., 

"அஞ்சல்துறை தேர்வுகளை தமிழில் எழுத முடியாது என அஞ்சல்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில்  திடீரென வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்கு எதிரானது; கடுமையாக கண்டிக்கத்தக்கது. அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்!

தேசிய அளவிலான பல்வேறு போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில், அஞ்சல்துறை தேர்வுகளில் மட்டும் அந்தத் தேர்வுகளை கடைசி நேரத்தில் ரத்து செய்தது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். இந்த முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூலம் வழக்கு தொடரப்படும்.

இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகளை நடத்துவதால், அஞ்சல்துறையில் வட இந்தியர்கள் அதிக அளவில் ஊடுருவ வாய்ப்பு ஏற்படும். தமிழே தெரியாத அவர்களை தமிழகத்தில் பணியமர்த்தினால் எவ்வாறு பணி செய்வார்கள்? தமிழ் முகவரிகளை எவ்வாறு படித்து கடிதங்களை வழங்குவர்?" என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தபால்துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் முதல்தாளுக்கான தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே வினாத்தாள்கள் வழங்கப்படும் எனவும் இரண்டாம் தாளுக்கான தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலத்திலிருந்து அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அனைத்து தபால் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன் படி., இந்தியா முழுவதும் நடைபெறும் தபால்துறை நடத்தும் பல்திறன் பணியாளர்கள் (Multi Tasking Staff), மெயில் குவார்ட் (Mail Guard), தபால்காரர் (Postman), அஞ்சலக உதவியாளர் (Postal Assistant), சார்டிங் அசிஸ்டெண்ட் (Sorting Assistant) போன்ற பணியிடங்களுக்கான தேர்வுகள் இதற்குமுன் அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வந்தன. 

கடந்த மே மாதம் 10-ஆம் தேதி இந்த பணிகளுக்கான தேர்வுகளின் பாடத்திட்டத்தினை மாற்றியமைத்து இந்தி மற்றும் ஆங்கிலத்திலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் 23 மாநில மொழிகளிலும் வினாத்தாள்கள் அமையும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. 

Trending News