கோவையில் 21ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை!

கோவை மாநகராட்சியில் வாகன நிறுத்தத்திற்கு அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து வருகிற 21 ஆம் தேதி பாஜக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2022, 04:58 PM IST
  • வேலுநாச்சியார் மற்றும் சிதம்பரனார் தேசிய தலைவர்கள் இல்லை என்பது மத்திய அரசின் கருத்து அல்ல.
  • நேரம் கருதி அனைத்து மாநில அரசுகளின் ஊர்திகளும் பங்கேற்க முடியாது எனக் கூறினார்.
கோவையில் 21ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை!  title=

கோவை மாநகராட்சியில் வாகன நிறுத்தத்திற்கு அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து வருகிற 21 ஆம் தேதி பாஜக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.  செல்வபுரம் தொகுதியில் பாஜக சார்பில் "நம்ம ஊரு மோடி பொங்கல் விழா" எனும் தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இங்கு 108 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். 

ALSO READ | குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனத்தை நிராகரித்த மத்திய அரசு!

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள்  சந்திப்பின் போது அவர் பேசுகையில்,  பாஜக இளைய தலைமுறைக்கு நம் கலாச்சாரத்தை எடுத்து செல்லும் வகையில் பொங்கல் விழாவை நடத்தி வருகிறோம். பிரதமரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக கூறினார்.  திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக சார்பில் திருவள்ளுவருக்கு ஒட்டபட்ட போஸ்டரில் உடை காவி நிறமாக இருந்தது குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக உண்மையை புரிந்து கொண்டு விட்டார்கள், என்றும் தமிழக மக்கள் திருவள்ளுவர் எப்படி வாழ்ந்ததார் என பார்க்க துவங்கி விட்டார்கள்,  திருவள்ளுவர் இந்து முறைப்படி வாழ்ந்தவர் என பதிலளித்தார். 

வேலுநாச்சியார் மற்றும் சிதம்பரனார் தேசிய தலைவர்கள் இல்லை என்பது மத்திய அரசின் கருத்து அல்ல. குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி அனுமதிக்காதது பாதுகாப்புத் துறை உரிய விளக்கம் அளிக்கும்.  கேரள மாநில ஊர்தியில் ஆதிசங்கரர் படம் இடம்பெறக்கூடாது என கேரள அரசு அறிவித்துள்ளதால் நாராயணகுருவின் படமும் இடம் பெறவில்லை.  நேரம் கருதி அனைத்து மாநில அரசுகளின் ஊர்திகளும் பங்கேற்க முடியாது எனக் கூறினார்.  உத்திரபிரதேசத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்க முடியாது என்ற நிலைப்பாடும், சாதி அரசியல் செய்யக்கூடாது என்ற நிலைப்பாடுகளால் பலர் விலகி சென்றுள்ளதாகவும், நிச்சயம் பாஜக உபி தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என தெரிவித்தார்.  பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறை இயக்குனர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதின் மூலம், பிரதமரின் பயணத்தின் போது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது எனவும், உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் முழுமையான தகவல்கள் வெளியாகும் எனவும் தெரிவித்தார். 

கோவை மாநகராட்சியில் 30 சாலைகளில் வாகன நிறுத்தம் செய்ய கட்டணம் என்பது ஏற்புடையது அல்ல, இதனை கண்டித்து வருகிற 21ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளதாகவும், அதற்கு முன்பாக மாநகராட்சி நிர்வாகம் இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் இல்லையேல் மக்கள் தேர்தலில் இதற்கு பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார். பொங்கல் பரிசிலிருந்த வெல்லம் உருகும் என்பதை விசாரிக்க டெஸ்லா தலைவர் எலான் மஸ்கை அழைத்து வந்து ஒரு கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் விஞ்ஞான ஊழலுக்கு விஞ்ஞான பூர்வமாக விளக்கம் அளிக்கிறார்கள் எனவும் விமர்சித்தார்.  பாஜக - அதிமுக கூட்டணி சிறப்பாக உள்ளது எனவும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் தான் குழப்பம் உள்ளது எனவும் கூறிய அவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் கூடாரம் காலியாகியுள்ளதாகவும் பாஜக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை எனவும் தெரிவித்தார்.  மேகதாதுவில் அணை கூடாது என்பதில் தமிழ்க பாஜக உறுதியாக உள்ளது எனவும் தமிழக அரசின் உரிமைகளை மீட்டெடுக்காவிட்டால் காவிரி, முல்லை பெரியாறு அணைகளின் உரிமைகள் பறிபோகும் எனவும் தெரிவித்தார்.

ALSO READ | திருமணம் செய்து ஏமாற்றினாரா விஏஓ? தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News