ரேஷன் பொருள்கள் சரியாக வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்- மு.க.ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதி ஜெகன்நாதன் தெருவில் உள்ள சிந்தாமணி நியாய விலைக்கடை, ராஜா தோட்டம் பகுதியில் உள்ள அமுதம் நியாய விலைக்கடை, வார்டு எண்.64 இல் சன்னதி தெருவில் உள்ள நியாய விலைக்கடைகளில் ஆய்வு செய்தார். 

Last Updated : Mar 5, 2017, 02:51 PM IST
ரேஷன் பொருள்கள் சரியாக வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்- மு.க.ஸ்டாலின்  title=

சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதி ஜெகன்நாதன் தெருவில் உள்ள சிந்தாமணி நியாய விலைக்கடை, ராஜா தோட்டம் பகுதியில் உள்ள அமுதம் நியாய விலைக்கடை, வார்டு எண்.64 இல் சன்னதி தெருவில் உள்ள நியாய விலைக்கடைகளில் ஆய்வு செய்தார். 

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கடந்த மூன்று மாதங்களாகவே சரியாக பொருட்கள் வழங்கப்படவில்லை என்றும், மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின்:-

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை. குறிப்பாக பாமாயில், பருப்பு போன்றவை கடந்த மூன்று, நான்கு மாதமாக சரியாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அரிசி, சர்க்கரை தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கின்றது இந்த புகாரின் அடிப்படையில் நான் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கைக்கு அந்த துறையின் அமைச்சராக இருக்கும் காமராஜூம், கூட்டுறவுத் துறை அமைச்சராக இருக்கும் செல்லூர் ராஜூம் முறையான விளக்கம் சொல்லாமல் நான் அரசியல் ஆக்குவதற்காக பொய் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இன்று என்னுடைய கொளத்தூர் தொகுதியில் உள்ள பல ரேஷன் கடைகளில் ஆய்வுப் பணியை மேற்கொண்டேன். 

மேலும் பொருட்களை வாங்குவதற்கு காத்திருந்த பொது மக்களிடமும் விளக்கமாக பேசியிருக்கிறேன். கடையில் இருக்கும் ஊழியர்கள் ஆதாரமாக ரிஜிஸ்டர் செய்யக்கூடிய நோட்டுப் புத்தகங்களை எடுத்துக் காட்டினார்கள். டிசம்பர் மாதம் தான் பாமாயில் வந்திருக்கிறது, அதேபோல பருப்பும் ஜனவரி மாதத்தில் தான் வந்திருக்கிறது. அதுவும் குறைவாக வந்திருக்கிறது என்பதை என்னிடத்தில் ஆதாரத்தோடு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். பொதுமக்களும் மிகுந்த தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கிறோம் என்கிற வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிலை என்னுடைய கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் உள்ளது.

எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் 89 சட்டமன்ற உறுப்பினர்களும் உடனடியாக அவர்கள் தொகுதியில் இருக்கும் ரேஷன் கடைகளுக்குச் சென்று ஆய்வுப் பணியை மேற்கொண்டு முறையான அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னிடம் வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கின்றேன். ஒரு வாரகாலத்திற்குள் இந்த அரசு இதனை சரிசெய்யவில்லை என்று சொன்னால் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு முன்னால் தி.மு.க. அறப்போராட்டத்தை நடத்தும் என்பதை இந்த அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Trending News