ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு காங்கிரஸில் கடும் போட்டி

திமுக கூட்டணியில் ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : May 15, 2022, 05:42 PM IST
  • காங்கிரஸில் கடும் போட்டி
  • மூன்று பேர் ராஜ்யசபா கேட்கிறார்கள்
  • தலைவர் பதவிக்கும் போட்டி
ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு காங்கிரஸில் கடும் போட்டி title=

தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி. இடத்திற்கு காங்கிரஸ் கட்சியில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு வரும் ஜூன் மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தற்போது எம்.பி.க்களாக உள்ள 6 பேரின் பதவிக்காலம் வரும் 29-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேரின் பதவிக் காலங்கள் நிறைவடைய உள்ளன.

மேலும் படிக்க | தமிழ் அணங்கு vs தமிழ் தாய்... வெல்லப் போவது யார்?

தற்போதைய சூழலில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் வெற்றி பெற 34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் தேவை. எனவே 159 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள திமுக 4 எம்.பி. பதவிகளைப் பெற முடியும். இதேபோன்று 75 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள அதிமுக கூட்டணிக்கு இரண்டு எம்.பி. இடங்கள் கிடைக்கும். மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் கிரிராஜன், நாமக்கல் திமுக மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் உள்ள ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், மாநில ஊடகப் பிரிவு தலைவரும், செய்தித் தொடர்பாளருமான கோபண்ணா ஆகிய மூன்று பேரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், இம்முறை மாநில காங்கிரஸ் தலைவராக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அண்மையில் தெரிவித்தார். அதனால் அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | நடத்துனரை ரோட்டில் வைத்து அடித்த போலீஸ் : தட்டிக் கேட்ட பொதுமக்கள் - வீடியோ

அதேபோல் மூத்த தலைவரான ப.சிதம்பரத்தின் மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலமும் நிறைவடைய உள்ளதால் அவரது பெயரும் பரிசீலனையில் உள்ளது. அதே சமயம் சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சியின் முன்னேற்றத்திற்கு பல மாற்றங்களைக் கொண்டு வந்த ஊடகப் பிரிவு தலைவரான கோபண்ணாவும், மாநிலங்களை உறுப்பினர் பதவியைக் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி. இடத்திற்கு காங்கிரஸ் கட்சியில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News