'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் புகழ் கோமகன் கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார்!!

'மனிதா உன் மனதைக் கீறி விதை போடு உரமாகும்’ என்கிற வரிகளின் மூலம் சினிமா ரசிகர்களின் மனங்களில் விதையாய் விழுந்த அந்த காட்சி, பலருக்குள் நம்பிக்கை என்னும் செடியை வளர்த்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 6, 2021, 04:27 PM IST
  • 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் புகழ் கோமகன் காலமானார்.
  • அவர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருந்தார்.
  • அவருக்கு 2019 ஆம் ஆண்டு கலைமாமணி விருது கிடைத்தது.
'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் புகழ் கோமகன் கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார்!!  title=

கொரோனா தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதன் பிடியில் பலரை நாம் இழந்துகொண்டிருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஆட்டோகிராஃப் படத்தின் 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலில் நடித்து, அனைவர் உள்ளங்களிலும் இடம் பெற்ற கோமகன் கொரோனா தொற்றால் இன்று அதிகாலை காலமானார். 

தேசிய விருது பெற்ற அந்த பாடலையும் யாராலும் மறக்க முடியாது, அதில் அனைவரது மனதையும் ஈர்த்த கோமகன் அவர்களையும் யாராலும் மறக்க முடியாது. நடிகை சினேகாவும் கோமகனும் இந்த பாடலில் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். வாழ்வில் சோகமாய் இருக்கும் தருணங்களிலும், துவண்டு போன தருணங்களிலும் கண்டிப்பாக இந்த பாடல் நம்மை தூக்கி விடும் பாடலாக இருக்கும் என்றால் அது மிகையாகாது. 

குறிப்பாக, கோமகன் இந்த பாடலில் உணர்வுப்பூர்வமாக நடித்திருப்பார். இந்த பாடல் மூலம் அவர் உலகப் புகழ் பெற்றார். 

ALSO READ: பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

பிறவி முதலே விழித்திறன்சவால் கொண்டிருனிருந்த கோமகன் தன் வாழ்க்கையில் பல சால்களையும் சோதனைகளையும் கடந்து பல சாதனைகளை செய்தார். 2019 ஆம் ஆண்டு அவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது. இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு ஒரு இசைக்குழுவையும் நடத்தி வந்தார். மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினராகவும் கோமகன் பணியாற்றியுள்ளார். ஆட்டோகிராஃப் படத்துக்குப் பிறகு ஓரிரு படங்களுக்கு இசையமைக்கவும் செய்த கோமகனுக்கு, சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் அரசு வேலை கிடைத்தது.

கொரோனா தொற்று (Coronavirus) பரவத் தொடங்கியதிலிருந்து மேடை நிகழ்ச்சிகள் கிடைக்காமல் இவரது குழு பாதிக்கப்பட்டது. இரு வாரங்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தோன்றவே அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாததால், ஐ.சி.எஃப் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும், ஆக்ஸிஜன் (Oxygen) அளவு தொடர்ந்து குறைந்து வந்ததால் வென்ட்டிலேட்டரிலேயே இருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.30 மணியளவில் உயிர் இழந்தார்.  

'மனிதா உன் மனதைக் கீறி விதை போடு உரமாகும்’ என்கிற வரிகளின் மூலம் சினிமா ரசிகர்களின் மனங்களில் விதையாய் விழுந்த அந்த காட்சி, பலருக்குள் நம்பிக்கை என்னும் செடியை வளர்த்தது. பார்வை குறைபாடு இருந்தாலும், முடங்கிவிடாமல், தானும் பல சாதனைகளை செய்து, மற்றவர்களுக்கும் பல உதவிகளை செய்து, மிகப்பெரிய உதாரணமாய் வாழ்ந்த அவரது மறைவு அனைவரையும் உலுக்கிப் போட்டுள்ளது. 

ALSO READ: கே.வி.ஆனந்த் சார், உங்கள் கேமரா ஒளியால் எனது எதிர்காலம் பிரகாசமானது: நடிகர் சூர்யா உருக்கம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News