'போர்ச்சுகலின் மகன்' சவர்க்கர்: சிறந்த சமூக சீர்திருத்தவாதியின் 134 வது பிறந்த தினம்!!

சுதந்திரப் போராட்ட வீரரான வீர சாவர்க்கரின் உருவப்படத்திற்கு  பிரதமர் மோடி மரியாதை....  

Last Updated : May 29, 2019, 09:10 AM IST
'போர்ச்சுகலின் மகன்' சவர்க்கர்: சிறந்த சமூக சீர்திருத்தவாதியின் 134 வது பிறந்த தினம்!! title=

சுதந்திரப் போராட்ட வீரரான வீர சாவர்க்கரின் உருவப்படத்திற்கு  பிரதமர் மோடி மரியாதை....  

வீரசாவர்க்கரின் 134 வதுபிறந்த தினம். பிஜே பியின் வரலாற்றை வீரசாவர்க்கர் என்ற விடுதலை போராளியை நினைக்காமல் வணங்காமல் எழுத முடியாது. வீர் சாவர்க்கரின் இயற்பெயர் விநாயக் தாமோதர் சாவர்க்கர். இவர் 1883-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் அருகில் பாகுர் என்ற கிராமத்தில் தாமோதர் பந்த் சாவர்க்கர், ராதா பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள் ஒரு சகோதரி. இவர் நாசிக்கில் பள்ளிக்கல்வியை முடித்தார். இவர் தனது 11-ஆவது வயதிலேயே சிறுவர்களைச் சேர்த்து வானரசேனையை உருவாக்கினார். இவர் பள்ளிப்பருவத்தில் திலகர் ஏற்படுத்திய சிவாஜி உற்சவம், கணபதி உற்சவம் போன்றவற்றை முன்னின்று நடத்தினார். இவர் தனது 9-ஆவது வயதில் தாயையும், 16-ஆவது வயதில் தந்தையையும் இழந்தார். 

1898-ல் மகாராஷ்டிராவில் ராண்ட் மற்றும் ஐர்ஸ்ட் ஆகியோரைக் கொன்றதற்காக சபேகர் சகோதாரர்கள் தூக்கிலிடப்பட்டனர். அது சாவர்க்கரைக் கடுமையாகப் பாதித்தது. அவர் 15- ஆவது வயதிலேயே இந்திய சுதந்திரத்திற்காக துர்கா தேவி முன்பு சபதம் எடுத்தார். 1901-ஆம் ஆண்டு யமுனா பாயை மணந்தார். 1902-ல் ஃபெர்குஸன் கல்லூரியில் சேர்ந்தார். புனாவில் அபிநவ் பாரத் சங்கத்தை ஏற்படுத்தினார். பின்னர் திலகரின் சுயராச்சியக்கட்சியில் சேர்ந்தார். பாலகங்காதர திலகரே இவரது அரசியல் குரு ஆவார். இவரது வீரம் மிக்க சொற்பொழிவுகளால் எரிச்சலுற்ற ஆங்கில அரசு அவரை கல்லூரியில் இருந்து நீக்கியது. ஆனால் அவர் தேர்வு எழுதி பட்டம் பெற்றார். 1905-ல் திலகரின் அந்நியப் பொருட்கள் பகிஷ்கரிப்பு நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார்.

ஜூன் 1906-ல் பாரிஸ்டர் படிப்புக்கு லண்டன் சென்றார். அங்கே இந்தியா ஹவுஸ் என்ற இடத்தில் இந்திய மாணவர்களைச் சேர்த்து சுதந்திர இந்திய சங்கத்தை உருவாக்கினார். அங்கே முக்கிய இந்திய விழாக்கள் கொண்டாடப்பட்டன. அங்கே கூடுபவர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி எடுத்துக் கூறினார். அதில் பெண்களும் இருந்தனர். அங்கே குண்டுகள் தயாரிக்கவும் துப்பாக்கி சுடவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் குறித்து அறிய இயலாமல் ஸ்காட்லாந்து காவல் துறையினரே திணறினர். அவர் ஆயுதங்கள் மூலம் இந்திய சுதந்திரத்தை அடைய வழி தேடினார். இந்திய புரட்சி இயக்கத்தை அவர் உலக அளவில் நடத்தினர்.

1909-ல் சாவர்க்கரின் சீடரான மதன் லால் டிங்கரா லண்டனில் சர். கர்சன் வில்லியைச் சுட்டுக் கொன்றார். நாசிக் கலெக்டர் ஜாக்சன், ஆனந்த் லக்ஷ்மண் கான்ஹரே என்ற இளைஞனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் இந்தியா ஹவுஸ் ஆங்கிலேயரின் கண்காணிப்புக்குக் கீழ் வந்தது. அதனால் ஆங்கில அரசு சாவர்க்கரை 1910 மார்ச் 13-ல் கைது செய்து இந்தியாவிற்கு அனுப்பியது. இந்தியாவுக்குக் கப்பலில் வரும்போது கப்பலின் கழிப்பறை ஜன்னலை உடைத்துக் கடலில் குதித்து பிரான்ஸ் நாட்டின் மார்செய்ல் துறைமுகத்தை அடைந்தார். அங்கிருந்த ஒரு பிரஞ்சுக் காவலரால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

பிரஞ்சுக் காவலரால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்த வழக்கு Permanent Court of International Arbitration-ல் பிரிட்டிஷ், பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே நடந்தது. பிரிட்டிஷ் அரசு சாவர்க்கரை மீண்டும் பிரான்ஸிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை என்று தீர்ப்பு கூறப்பட்டது. அவர்மீது சட்ட விரோதமாக ஆயுதம் அனுப்பியது, மக்களைத் தூண்டும் விதமாகப் பேசியது என்று குற்றம் சாட்டி 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்தமானுக்கு அனுப்பியது. சாவர்க்கரைப் பற்றி உலகம் முழுவதும் அறிந்திருந்தனர். அவர் கைது செய்யப்பட்ட செய்தி அமெரிக்கா, சீனா, அயர்லாந்து, எகிப்து நாடுகளில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பரபஞ்சமே கிடுகிடுத்துப் போனது. உலகம் அழிவை சந்திக்க காத்திருக்க வேண்டிருந்தது..

1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் நாள் காந்தியின் படுகொலைக்கு பின்னர் படுகொலையாளியான நாதுராம் கோட்சேவும் அவனது கூட்டாளிகளும், கூட்டுசதிகாரர்களும் கைது செய்யப்பட்டனர். கூட்டுசதி செய்ததாக சாவர்க்கரை சிவாஜி பார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பிப்ரவரி 5ஆம் நாள் 1948 இல் கைது செய்யப்பட்டார். அந்தமான் சிற்றறைச் சிறை மிகவும் கொடூரமானது. ஓர் அறையின் அளவு சுமார் 13 அடிக்கு 7 அடி மட்டுமே. சுமார் 7 அடி உயரத்திற்கு மேல் ஒரு சிறிய ஜன்னல் வழியே வரும் குறைந்த வெளிச்சம் போதுமானதாக இருக்காது. கடுமையான வேலை, மோசமான சாப்பாடு, மனிதாபிமானமற்ற அடி, உதை, கடுமையான குளிர் போன்றவை அந்தமான் சிறையின் அடையாளங்கள் ஆகும்.

சாவர்க்கரின் மூத்த சகோதரர் கணேஷ் தாமோதர் சாவர்க்கரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு அந்தமான் சிறையில் இருந்தார். அவர் பாபாராவ் என்று அழைக்கப்பட்டார். அவர் சாவர்க்கருக்கு பக்கபலமாக விளங்கினார். சாவர்க்கரின் இளைய சகோதரர் நாராயண் தாமோதர் சாவர்க்கரும் திலகரின் சீடராவார். அந்தமான் சிறையில் சாவர்க்கருக்கு எழுதுவதற்குத் தாளும் பேனாவும் கொடுக்கப்படவில்லை. அவர் சுவரில் கல்லால் எழுதினார். மனதில் மனப்பாடம் செய்தார். இந்தியா வந்த பிறகு அவற்றை எழுதினார். சுதந்திரம் குறித்து மராத்தியில் இவர் எழுதிய கவிதைகள் மிகவும் புகழ்வாய்ந்தவை.

இந்திய சுதந்திரத்திற்காக போராடியதற்காக அந்தமான் சிறையில் அவர் 11 ஆண்டுகள் சிரமப்பட்டார். பலமுறை மன்னிப்பு கடிதங்கள் எழுதி கொடுத்ததால் 1921 மே 2-ல் ரத்தினகிரி சிறைக்கு மாற்றப்பட்டார். ரத்தினகிரி சிறையில் "இந்துத்வா" என்ற நூலை எழுதினார். ரத்தினகிரி மாவட்டத்தைவிட்டு வெளியேறக்கூடாது, அடுத்த 5 வருடங்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று நிபந்தனை விதித்து 1924 ஜனவரி 6 அன்று விடுதலை செய்யப்பட்டார். அவர் காந்திஜியின் அரசியலைக் கடுமையாக விமர்சித்தார். இந்தியப் பிரிவினையை எதிர்த்தார்.

இவர் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி. தீண்டாமையை ஒழிக்கப்பாடுபட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட எல்லா இந்துக்களும் வணங்க "பதித பவன்" என்ற கோவிலை ரத்தினகிரியில் 1931 பிப்ரவரி 22 அன்று ஏற்படுத்தினார். 1937-லேயே காஷ்மீர் பிரச்சினை வரும் என்றும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மற்றும் சீனப்போர் பற்றியும் கூறியிருந்தார். 1943 ஆம் ஆண்டு அவரது 61- ஆவது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 1963- ஆம் ஆண்டு சாவர்க்கரது மனைவி யமுனாபாய் இறந்தார். அவர் சாவர்க்கருக்கு எல்லா விதத்திலும் துணை நின்றார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுமியை சாவர்க்கர் அழைத்து வந்தபோது அவர் அந்த சிறுமியைக் கவனித்துக் கொண்டார். சாவர்க்கருக்கு விஸ்வாஸ், பிரபா என்ற இரு குழந்தைகள்.

கடந்த 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1966 பிப்ரவரி 26-ல் இறந்தார். ஒருவரது வாழ்க்கையின் நோக்கம் பூர்த்தியான பிறகு, சமூகத்திற்கு சேவை செய்யும் வலிமை இழந்த நிலையில் இறப்புக்காக காத்திருக்காமல் இறப்பைச் சந்திப்பது சிறந்தது என்று கூறினார். இது ஆத்ம ஹத்யா அல்ல, ஆத்ம சமர்ப்பணம் முதலான பல நூல்களை எழுதினார். அவர் இறந்தவுடன் இலட்சம் மக்களுக்கு மேல் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 2000 RSS சேவகர்கள் இறுதி ஊர்வலத்தில் மரியாதை செலுத்தினர். சாவர்க்கரைப் பற்றி ஒரு திரைப்படம் 2001-ல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

சுதந்திரப் போராட்ட வீரரான வீர சாவர்க்கரின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, புதிய நாட்டை கட்டமைப்பதில் அவர் உந்து சக்தியாக விளங்கியதாக கூறியுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள சாவர்க்கர் உருவப்படத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

 

Trending News