அப்போலோவில் ஜெயலலிதா! பிரமாண பத்திரத்தில் சசிகலா தகவல்!!

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான தீர்ப்பால் ஜெயலலிதா மன அழுத்தத்தில் இருந்தார். சிறையில் மன வேதனையுடனே காணப்பட்டார். 

Last Updated : Mar 21, 2018, 12:22 PM IST
அப்போலோவில் ஜெயலலிதா! பிரமாண பத்திரத்தில் சசிகலா தகவல்!! title=

ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல்நலம் பாதிப்பு அடைந்ததால், அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீரிழிவு நோய் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. 

பின்னர் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. எனவே தமிழக அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா தனது வாக்குமூலத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சசிகலா சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதில் இழுத்தடிக்கப்பட்டது. ஐந்து முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டும் சசிகலா பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவில்லை என கூறியுள்ள ஆணையம், உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யப்படாவிட்டால் சசிகலாவிடம் நேரில் சென்று விசாரணை நடத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்து இருந்தது. 

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,

செப்டம்பர் 22, 2016 இரவு 9.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரது அறையில் அவர் நினைவின்றி மயங்கி கிடந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர் சிவக்குமார் அப்போலோ மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அப்போலோவில் இருந்து இரண்டு ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸில் நினைவு திரும்பிய ஜெயலலிதா எங்கு செல்கிறோம் என சசிகலாவிடம் கேட்டதாகவும் மருத்துவமனைக்கு செல்கிறோம் என தெரிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. 10 -15 நிமிடத்திற்குள் மருத்துவமனையை அடைந்து விட்டதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான தீர்ப்பால் ஜெயலலிதா மன அழுத்தத்தில் இருந்தார். சிறையில் மன வேதனையுடனே காணப்பட்டார். அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரித்தது. மனஅழுத்தமே அவரது உடல்நிலை மோசமானதற்கு காரணம். ஆர்.கே.நகரில் தேர்தலின் வெற்றிக்கு பிறகும் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த நீரிழிவு மருத்துவர், தோல்நோய் மருத்துவர்கள் குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மாத்திரைகளை அளித்தனர். செப்டம்பர் 16 வரை மாத்திரை சாப்பிட்டார். 

அப்போலோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை அக்டோபர் 22 முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்தார். அதிமுக தலைவர்கள் ஓபன்னீர்செல்வம், தம்பிதுரை மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் செப்டம்பர் 22 -27 தேதிகளில் சந்தித்தனர். செப்டம்பர் 27 தனது தனி பாதுகாப்பு அதிகாரிகளான பெருமாள்சாமி மற்றும் வீரபெருமாளை சந்தித்தார். அப்போது அவர்களிடம் நான் நலமுடன் இருக்கிறேன், சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் நாம் வீட்டிற்கு சென்று விடலாம் எனக் கூறியதாக சசிகலா தனது பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்

Trending News