பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: மன்மோகன் சிங்

நரேந்திர மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 8, 2018, 03:18 PM IST
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: மன்மோகன் சிங் title=

நரேந்திர மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இதே நாளில் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இத்திட்டத்தால் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பணமின்றி தவித்தனர். ATM வாசல்களில் மணிக்கணக்கில் பலர் காத்திருந்தனர். சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிக்கப்படுவதோடு, கள்ளநோட்டு புழக்கமும் தடுக்கப்படும் என்ற பிரதமர், பயங்கரவாதிகளுக்கு பணம் செல்லுவது தடுக்கப்படுவதோடு இந்திய பொருளாதாரமும் உயர்த்தப்படும் என்றார். நாட்டின் எதிர்காலம் கருதி மக்கள் சிரமங்களை 50 நாட்களுக்கு பொறுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்த இரண்டாம் ஆண்டை நாட்டின் கருப்பு தினமாக அனுசரிக்கும் என காங்கிரஸ் தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து, மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் சமூகத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் எனவும், இதற்குச் சமூகத்தின் ஒவ்வொருவரும் சாட்சியாக உள்ளதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்தார். மேலும், வயது, பாலினம், மதம், தொழில் பாகுபாடு இல்லாமல் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

பொருளாதாரத் தவறான போக்குகள் நீண்ட காலத்திற்கு தேசத்தை எவ்வாறு அழிக்கின்றன மற்றும் பொருளாதார கொள்கைகளை சிந்தனை மற்றும் கவனத்துடன்  கையாள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள இன்றைய தினம் ஒரு எடுத்துக்காட்டாகும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 

 

Trending News