காற்று மாசுவை கட்டுப்படுத்த டெல்லி அரசு தீட்டும் புது திட்டம்...

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து கடுமையான நிலைப்பாட்டை அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம் எடுத்துள்ளது. 

Last Updated : Oct 26, 2019, 07:30 PM IST
காற்று மாசுவை கட்டுப்படுத்த டெல்லி அரசு தீட்டும் புது திட்டம்... title=

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து கடுமையான நிலைப்பாட்டை அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம் எடுத்துள்ளது. 

அந்த வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் இருக்கும் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றுமாறு பொதுப்பணித்துறையுடன் தொடர்புடைய நிர்வாக பொறியாளர்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை பின்பற்ற தவறும் பட்சத்தில் பொறியாளர்களின் சம்பளம் கழிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
 
முன்னதாக அக்டோபர் 25-ஆம் தேதி, தலைமைச் செயலாளர் விஜய் தேவ் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். இந்த கூட்டத்தில், சம்பளக் குறைப்புக்கான உத்தரவை குறித்து அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும்., அதிகபட்ச மாசுபாடு உள்ள 13 இடங்களை 24 மணி நேரத்தில் அடையாளம் காணவும், இரண்டு வாரங்களுக்குள் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை புள்ளிகளை முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதேவேளையில் சட்டவிரோதமாக குப்பை கொட்டுவதைத் தடுக்க ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தீபாவளிக்கு முன்னர், அதிகரித்து வரும் மாசுபாட்டைத் தடுக்க கடுமையான வழிகாட்டுதல்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் (EPCA) வெளியிட்டது. 

அந்த வகையில் டெல்லி, ஃபரிதாபாத், காஜியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, சோனிபட் போன்ற பகுதிகளில் சாலை கட்டுமானம், கட்டிட கட்டுமானம், நிலக்கரி சார்ந்த தொழில்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை மூடுவதற்கான வழிமுறைகளையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் EPCA வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் சுற்றுசூழல் மாசு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், மாசுவினை கட்டுப்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முன்னதாக டெல்லியில் மாசு அற்ற தீபாவளி கொண்டாட மக்களுக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார். பட்டாசுகள் இன்றி கலாச்சார நிகழ்ச்சிகளுடன் தீபாவளியை கொண்டாடுவது என மக்களுக்கு கெஜ்ரிவால் அறிவிப்பு விடுத்தார். இந்நிலையில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றுவது குறித்த அறிவிப்பினை டெல்லி அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

Trending News