வரலாற்றில் முதன் முறையாக பொங்கலுக்கு விடுமுறை அறிவித்த Supreme Court: நன்றி தெரிவித்தார் EPS

பொங்கல் பண்டிகை காரணமாக 2021 ஜனவரி 14 மற்றும் 15 தேதிகளை விடுமுறை தினமாக அறிவிக்க உச்சநீதிமன்றம் எடுத்த முடிவை தமிழக முதல்வர் கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை வரவேற்று நன்றி கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 28, 2020, 02:58 PM IST
  • பொங்கல் பண்டிகைக்கு உச்ச நீதிமன்றம் விடுமுறை.
  • உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு நன்றி கூறினார் தமிழக முதல்வர்.
  • தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையாகும் பொங்கல்.
வரலாற்றில் முதன் முறையாக பொங்கலுக்கு விடுமுறை அறிவித்த Supreme Court: நன்றி தெரிவித்தார் EPS title=

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. வரலாற்றில் முதன் முறையாக இப்படி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற தேசிய அளவிலான பண்டிகைகளுக்கும், சில வட மாநில பண்டிகைகளுக்கும் மட்டுமே உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். தமிழர்களின் முக்கிய பண்டிகையாக கருதப்படுவது பொங்கல் பண்டிகை.

உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) பல தமிழர்கள் பல்வேறு பதவிகளில் பணிபுரிகிறார்கள். இதை கருத்தில் கொண்டு தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பல காலமாகவே கோரப்பட்டு வந்தது. இந்த கோரிக்கை 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் நிறைவேறுகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவை பல்வேறு தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் வரவேற்றுள்ளன.   

பொங்கல் (Pongal) பண்டிகை காரணமாக 2021 ஜனவரி 14 மற்றும் 15 தேதிகளை விடுமுறை தினமாக அறிவிக்க உச்சநீதிமன்றம் எடுத்த முடிவை தமிழக முதல்வர் கே.பழனிசாமி (K Palanisamy) வெள்ளிக்கிழமை வரவேற்று நன்றி கூறினார். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழரின் உழவர் திருவிழாவிற்கு விடுமுறை அறிவித்ததற்காக உச்சநீதிமன்றத்திற்கு பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாளில் சூரியக் கடவுள், மழை மற்றும் உழவுக்கு உதவும் விலங்குகளுக்கு நன்றி தெரிவிக்க பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் (Tamil Nadu) பொங்கல் பண்டிகைகள் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றன. முதல் நாள் போகி, மக்கள் தங்கள் பழைய உடைகள், பாய்கள் மற்றும் பிற பொருட்களை எரிக்கிறார்கள். பழையன கழித்து புதிய விஷயங்களை நம் வாழ்வில் புகட்டுவதை எடுத்துக் காட்டும் வண்ணம் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. வீடுகள் புதிதாக வண்ணம் பூசப்படுகின்றன.

இரண்டாவது நாள் தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. சூரியக் கடவுளுக்கு, புதிதாக வயலில் இருந்து அறுவடை செய்யப்பட்ட அரிசியில் பொங்கல் வைத்து, புது காய்கறிகளுடன் படைக்கப்படுகிறது.

ALSO READ: அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை

மூன்றாம் நாள் மாட்டு பொங்கல் என்பது காளைகள் மற்றும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் மாடுகளை குளிப்பாட்டி, ​அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, அலங்கரித்து விவசாயிகள் மாடுகளை வணங்குகிறார்கள்.

பெண்கள் வண்ண சாதங்களுடன் பறவைகளுக்கு உணவளித்து, தங்கள் சகோதரர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.

மாநிலத்தின் சில பகுதிகளில், ஜல்லிக்கட்டு (Jallikattu) என்னும் காளைகளை அடக்கும் வீர விளையாட்டு நடத்தப்படுகிறது.

நான்காவது நாள் காணும் பொங்கலன்று மக்கள் உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து அவர்களுடன் நேரம் செலவழித்து மகிழ்கிறார்கள். 

ALSO READ: கனமழை மற்றும் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவு: முதல்வர்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News