பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு; அரசின் முடிவு என்ன?

பேனர் சரிந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் தந்தை 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு மனு. தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 7, 2020, 03:10 AM IST
பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு; அரசின் முடிவு என்ன? title=

சென்னை: கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி பள்ளிக்கரணையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் சரிந்து சுபஸ்ரீ (வயது 23) என்ற இளம் பெண் மீது விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார். அவரின் உயிரிழப்புக்கு அவரது தந்தை 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கின் விசாரணை நேற்று (திங்கக்கிழமை) நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

அப்பொழுது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு அரசு சார்பில் 5 லட்ச ரூபாயும், அரசியல் கட்சிகள் சார்பில் 7 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை கொடுத்த விண்ணப்பம் பரிசீலினையில் உள்ளது என்றும் கூறினார்.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, சுபஸ்ரீ தந்தையின் கோரிக்கையை நான்கு வாரங்களில் பரிசீலித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

முன்னதாக, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அதிமுக கவுன்சிலர் சி.ஜெயகோபால் கிருஷ்ணகிரியிலிருந்து சென்னை நகர போலீசாரால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் அரசியல் கட்சிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேனர் சரிந்து உயிர் இழந்த சுபஸ்ரீ தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஷேசசாயி ஆகியோர் கொண்ட அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், பேனர் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகள் மெத்தனமே காரணம். அரசியல் கட்சியினருக்கு விஸ்வாசமாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். உயிரிழப்புக்கு ரூ.2 லட்சம் கருணை தொகை தந்தால் பிரச்னை தீர்ந்து விடுவதாக தமிழக அரசு நினைக்கிறதா? என கேள்வியும் எழுப்பினார்கள். 

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன. விதிமீறி பேனர் வைப்பதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும், அது பின்னர் எல்லாம் அரசியல் ஆக்கப்படுகிறது என நீதிபதிகள் வேதனை பட்டார்கள். மேலும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் உத்தரவிட்டிருந்தது. அத்துடன் இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. உயிர் இழந்த சுபஸ்ரீ தொடர்பான வழக்கை விசாரித்து அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர் குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது

Trending News