சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் சவுக்கு சங்கர்! எதற்காக?

Savukku Shankar : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர், சிறையில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியுள்ளார். பின்னணி என்ன?

Written by - Chithira Rekha | Last Updated : Oct 1, 2022, 11:39 AM IST
  • சிறையில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதி மறுப்பு
  • உண்ணாவிரதம் இருக்கும் சவுக்கு சங்கர்
  • கடலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றவும் கோரிக்கை
சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் சவுக்கு சங்கர்! எதற்காக? title=

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர்,  நீதித்துறையில் ஊழல் படிந்திருப்பதாகக்  கடந்த ஜூலை 22-ம் தேதி, தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார். அதோடு சில யூடியூப் சேனல்களுக்கும் இதுகுறித்து பேட்டி அளித்திருந்தார். இது தொடர்பாக, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும்,  சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தனர். 

லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர், கடந்த 2008-ம் ஆண்டு உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை கசியவிட்டதாகக் கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் அரசின் வாழ்வாதார உதவித் தொகையைப் பெற்று வருகிறார். இதனைக் குறிப்பிட்ட நீதிபதிகள், கடந்த 13 ஆண்டுகளாக அரசின் வாழ்வாதார உதவித்தொகையைப் பெற்று வரும் நிலையில், அரசியலமைப்பின் 3 உறுப்புகளையும் சவுக்கு சங்கர் விமர்சிப்பது நடத்தை விதிகளுக்கு எதிரானது என குறிப்பிட்டனர். 

மேலும் படிக்க | சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கிய மதுரை உயர் நீதிமன்றக் கிளை

முதலில் மதுரைச்சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் அவரை பணிநீக்கம் செய்வதற்கான நோட்டீசின் நகலை, சிறையில் உள்ள சவுக்கு சங்கரிடம் வழங்க முற்பட்டபோது, அவர் அதனை கிழித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடந்து, சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நோட்டீசைக் கிழித்ததற்காக, சவுக்கு சங்கருக்கு பார்வையாளர்களை சந்திக்க ஒரு மாதத்திற்கு அனுமதி கிடையாது என சிறைத்துறை தண்டனை வழங்கியுள்ளதாக  அவரது வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார். இந்த நிலையில், பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பது, தனிமைச் சிறையில் வைத்திருப்பது, புழல் சிறைக்கு மாற்றக்கோரி அளித்துள்ள மனு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆகியவற்றைக் கண்டித்து நேற்று காலையில் இருந்து சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | சவுக்கு சங்கர் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தொல்.திருமாவளவன்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News