அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு - நீதிமன்றம் சரமாரி கேள்வி

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை புலன் விசாரணை அதிகாரியிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 29, 2024, 09:37 PM IST
  • அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கு
  • சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி
  • மார்ச் 8 ஆம் தேதிக்கு வழக்கு தள்ளி வைப்பு
அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு - நீதிமன்றம் சரமாரி கேள்வி title=

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கு விசாரணையின்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வாதங்களை எடுத்து வைத்தார். அப்போது அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின் பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நியாயமான விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆதாரங்களை புறக்கணித்து விட்டு வழக்கு தொடர்வது எப்படி நியாயமான விசாரணையாக கருத முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

வழக்குப்பதிவு செய்யும் முன் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கை பரிசீலித்திருக்க வேண்டும். வழக்கில் முதல் புலன் விசாரணை அதிகாரி சேகரித்த ஆதாரங்களை மாற்றாமல், கூடுதல் ஆதாரங்களை சேர்ப்பது மறு விசாரணை அல்ல, மேல் விசாரணை தான் எனவும், இந்த மேல் விசாரணையும், காவல் கண்காணிப்பாளரின் ஒப்புதலை பெற்றே மேற்கொள்ளப்பட்டது என வாதிட்டார்.

மேலும் படிக்க | பிரதமரே தமிழ்நாட்டை வளர்க்கிறீங்களா? டேட்டாவுடன் மோடிக்கு வகுப்பெடுத்த பிடிஆர்

மேல் விசாரணைக்கு பின், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கலாம். அதற்கு சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு எந்த தடையும் இல்லை எனக்கூறி வாதத்தை நிறைவு செய்தார்.

பின்னர், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனை அழைத்து, எத்தனை ஆண்டுகளாக ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கிறீர்கள் எனக் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார். அதற்கு ஏழு ஆண்டுகளாக ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை புலன் விசாரணை செய்து வருவதாக புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் பதிலளித்தார். 

இந்த ஏழு ஆண்டுகளில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தின் அடிப்படையில் மேல் விசாரணை நடத்தியிருக்கிறீர்களா?, 2016 ஆம் ஆண்டு விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல என பதில் மனு தாக்கல் செய்யும்போது மேல் விசாரணை நடத்த தோன்றவில்லையா?, 2021ல் திடீரென மேல் விசாரணை செய்ய வேண்டும் என தோன்றியது ஏன்? என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தின் அடிப்படையில் மேல் விசாரணை கோரப்பட்டதாக தெரிவித்தார். இதே நடைமுறையை சாதாரண வழக்குகளில் பின்பற்றுவீர்களா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் வாதத்துக்காக விசாரணையை மார்ச் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் படிக்க | சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சாந்தன் மரணம்! அதிகாரபூர்வ அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News