சென்னை சில்க்ஸ் விதிமுறை மீறி கட்டப்பட்டு உள்ளது - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

Last Updated : Jun 1, 2017, 03:50 PM IST
சென்னை சில்க்ஸ் விதிமுறை மீறி கட்டப்பட்டு உள்ளது - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் title=

சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

‘சென்னை சில்க்ஸ்’ ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயில் 7 மாடி கட்டிடமும், அதில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள ஜவுளிகளும் எரிந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தீ விபத்திற்குள்ளான துணிக்கடையின் மேல்தளத்தில் தங்கியிருந்த ஊழியர்கள் 14 பேரை தீ அணைப்பு படை வீரர்கள் மீட்டுள்ளனர். 4 மணி நேரம் போராட்டத்திற்குப்பின், கிரேன் மூலம் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக ஊழியர்களை மீட்டனர். 

தீயணைப்பு படையினர் கடுமையாக போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இரவு முழுவதும் கரும்புகையுடன் தீ எரிந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து 2-வது நாளாக தீ எரிகிறது. 

இதனால் கடையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கு அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்ததால் இன்று கட்டிடத்தின் 4, 5, 6, 7-வது மாடிகள் இடிந்து விழுந்தது. அப்போது அந்த பகுதி முழுவதும் பயங்கர புகை மூட்டம் கிளம்பியது. 

தீவிபத்து நடந்த இடத்தில் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையாளர், தீயணைப்புத் துறை இணை இயக்குனர், தியாகராய நகர் துணை கமி‌ஷனர் ஆகியோர் தீயணைப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.

அமைச்சர்கள் உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். 

பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- 

சென்னை சில்க்ஸ் 4 மாடி கட்ட மட்டுமே சிஎம்டிஏ அனுமதி வழங்கியது. ஆனால் 4 மாடி கட்ட அனுமதி வாங்கிவிட்டு தரைத்தளம் உட்பட 8 மாடி கட்டிய சென்னை சில்க்ஸுக்கும் அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சென்னை சில்க்ஸின் 5,6,7 மாடிகளை இடிப்பதற்கு சென்னை சில்க்ஸ் நீதிமன்றத்தில் தடை வாங்கியது. கட்டுமான பணிமுடிப்புச் சான்றிதழலையும் சென்னை சில்க்ஸ்க்கு அரசு வழங்கவில்லை.

தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2011-ல் சென்னையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் 7 மாடி கட்டிடத்தில் துரதிருஷ்டவசமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தற்போது தீயை அணைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. தீயணைப்பு படையினர் தங்கள் உயிரை பணயம் வைத்து கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த போதிலும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இப்போது நமக்கு இருக்கும் சவாலான பணி கட்டிடத்தை பாதுகாப்பான முறையில் இடிப்பதுதான் ஆகும். இந்த கட்டிடத்தை இடிக்கும் போது அருகில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். அரசு சார்பிலேயே இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Trending News