பும்ரா இல்லை - உலகக்கோப்பையில் இந்தியாவை காப்பாற்றப்போவது யார்? - இதோ!

டி20 உலகக்கோப்பையை முன்னிட்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டது. இந்தியாவின் பேட்டிங் வரிசை போதுமானதாக இருந்தாலும், பந்துவீச்சு குறித்த கவலைதான் அதிகமாக இருக்கிறது. போதாக்குறைக்கு கடைசி கட்டத்தில் பும்ராவும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவில் கைக்கொடுக்கப்போகும் சிறந்த 5 பந்துவீச்சாளர்கள் குறித்து இங்கு காண்போம்.

 

  • Oct 07, 2022, 22:40 PM IST

 

 

 

1 /5

ஹர்திக் பாண்டியா  ஆல்-ரவுண்டரான இவர், தற்போது இந்திய அணிக்கான முக்கிய வீரராக வலம் வருகிறார். பேட்டிங்கில் மட்டுமின்றி பார்ட்-டைம் பந்துவீச்சாளராகவும் அசத்துகிறார். புதிய பந்தை வைத்து பவர்பிளே ஓவர் என்றாலும் சரி, மிடில் ஓவர்கள் என்றாலும் சரி விக்கெட்டை வீழ்த்தும் வல்லமையுடன் இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இவரது வியூகம் எப்படி இருக்கும் என பலரும் காத்திருக்கின்றனர். 

2 /5

அக்சர் படேல் ஜடேஜா காயம் காரணமாக வெளியேறியபோது, இந்தியா ஒருவரை திடீரென திரும்பிபார்த்தது என்றால் அது அக்சர்தான். ஆம், ஜடேஜா விட்டுச்சென்ற இடதுகை ஆல்-ரவுண்டர் இடத்தில் இவரை விட்டால் வேறு யாருமேயில்லை என்பதுதான் நிதர்சனம். ஆசியக்கோப்பை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக விளையாடிய இவர் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

3 /5

புவனேஷ்வர் குமார்  இந்தியாவின் தற்போது 'ஸ்விங் கிங்'. புது பந்தில் மிரட்டலாக வீசும் இவர், டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும், பந்துவீச்சு படையின் சீனியராக அணியில் இவர்தான் இருக்கிறார். நிச்சயம் இவரின் அனுபவம் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவில் கைக்கொடுக்கும். தொடக்க ஓவர்களில் இவரின் பந்துகளை எதிர்கொள்ள பேட்டர்களுக்கு கடும் சவாலாக இருக்கும். 

4 /5

ஹர்ஷல் படேல்  கடந்த இரு ஐபிஎல் தொடர்களிலும் பெங்களூரு அணிக்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக மட்டுமின்றி, முக்கிய கட்டங்களில் அணிக்கு தேவையான விக்கெட்டுகளை கைப்பற்றிக் கொடுத்ததற்காகவே இந்திய டி20 அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது. துணை கண்டனம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இடங்களில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவில் இவரது பந்துவீச்சு எடுபடுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

5 /5

அர்ஷ்தீப் சிங் இந்திய அணியின் மிகவும் அரிதான இடத்தை நிரப்ப வந்த ஆபத்தாந்தவன் தான் இந்த அர்ஷ்தீப் சிங். இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்பது ஜாகீர் கானுக்கு பிறகு இந்திய அணிக்கு கிடைக்கப்பெறாத பொக்கிஷமாகவே இருந்தது. இடையே நடராஜன் எட்டிப்பார்த்தாலும், காயம் காரணமாக அவரால் இந்திய அணியில் நீடிக்க முடியவில்லை. அவரை போலவே ஐபிஎல் மூலம் வெளிசத்திற்கு வந்த அர்ஷ்தீப் பவர்பிளேயிலும், டெத் ஓவர்களிலும் அசத்தலாக பந்துவீசி வருகிறார். டெத் ஓவர்களில் குறைவான ரன்களை கொடுக்கும் இவரது திறன் இந்திய அணிக்கும் மிகப்பெரும் உதவியாக இருக்கும்.