SK15: சிவகார்த்திகேயன் படத்திற்கு வந்தது புதிய சிக்கல்!

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்திற்கு ‘ஹீரோ’ என பெயர் சூட்டுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது!

Last Updated : Mar 14, 2019, 09:09 AM IST
SK15: சிவகார்த்திகேயன் படத்திற்கு வந்தது புதிய சிக்கல்! title=

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்திற்கு ‘ஹீரோ’ என பெயர் சூட்டுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது!

மிஸ்டர்.லோக்கல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் பிசியாக நடித்துவருகின்றார். இதுதவிர ரவிக்குமார் இயக்கத்திலும், ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், நேற்று பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அடுத்த திரைப்படத்திற்கான படப்படிப்பினை பூஜையுடன் துவங்கினர் படக்குழுவினர்.

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், அர்ஜுன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா இருவரும் ஹீரோயின்களாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்திற்கு ‘ஹீரோ’ என படக்குழுவினர் பெயர் சூட்டியுள்ளனர்.

ஆனால், விஜய் தேவரகொண்டா நடிப்பில், ‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் வசனகர்த்தா ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் உருவாகும் பன்மொழிப் படத்துக்கும் ‘ஹீரோ’ என்று முன்னதாகவே  பெயரிடப்பட்டுள்ளது. 

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாவதால், அனைத்து மொழிகளுக்கும் பொதுவான தலைப்பாக ‘ஹீரோ’ என்று வைக்கப்பட்டுள்ளது. ‘ஹீரோ’ என்ற தலைப்பைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவுசெய்து, அதைக் கடந்த வருடம் (2018) ஜூன் மாதம் 14-ம் தேதி புதுப்பித்துள்ளனர். வருகிற ஜூன் மாதம் 14-ம் தேதிவரை அதற்கான காலக்கெடு உள்ளது. இந்த ரசீதை விஜய் தேவரகொண்டா படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில் தற்போது, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படும் சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பும் ‘ஹீரோ’ என இருப்பதால், இரண்டு படங்களில் ஏதேனும் ஒரு தரப்பு கண்டிப்பாகப் படத் தலைப்பை மாற்றியாக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இரண்டு படங்களுக்கும் ஒரே தலைப்பை தயாரிப்பாளர்கள் சங்கம் கொடுத்ததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News