ஒரே தொகுதியில் 185 வேட்பாளர்கள்; மாஸ் காட்டும் நிஜாமாபாத்!

மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் 185 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது!

Last Updated : Apr 8, 2019, 08:28 PM IST
ஒரே தொகுதியில் 185 வேட்பாளர்கள்; மாஸ் காட்டும் நிஜாமாபாத்! title=

மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் 185 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது!

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11 துவங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. எதிர்வரும் மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக 185 வேட்பாளர்கள் போட்டியிடும் தெலுங்கானாவின் நிஜாமாபாத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்த 35 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி அமைந்துள்ளது. ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசின் திட்டங்கள் அம்மாநில விவசாயிகளின் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசின் மீதுள்ள அதிருப்தி காரணமாக 170 விவசாயிகள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

இங்கு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சார்பில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா போட்டியிடுகிறார். வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் தேர்தல் நடத்துவதற்கான செலவும் அதிகரித்து உள்ளது.

இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ரஜத் குமார் தெரிவிக்கையில்., நிஜாமாபாத் மக்களவை தொகுதி ஏழு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. ஒரு சட்டசபை தொகுதிக்கு 3 கோடி ரூபாய் என இத்தொகுதியில் தேர்தல் நடத்த மொத்தம் 21 கோடி ரூபாய் செலவாகும். ஆனால் இங்கு வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கூடுதலாக 14 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

இத்தொகுதியில் வேட்பாளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் முன்னாதக ஓட்டுச் சீட்டு முறையை பயன்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் கூடுதலாக ஓட்டு இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

ஒரு தொகுதிக்கு இவ்வளவு அதிகமான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது உலகிலேயே இது தான் முதல் முறை என குறிப்பிட்ட அவர், ஓட்டுப் பதிவின் போது மின்னணு இயந்திரங்களை எடுத்து வரவும், எடுத்துச் செல்லவும் அவசர உதவிக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிக ஊழியர்கள் தேவைப்படுவதால் அவர்களின் பயணம் மற்றும் அகவிலைப்படிக்கு பெரும் தொகை தேவைப்படுகிறது. இவை அனைத்தையும் கணக்கிடும் போது இத்தொகுதியில் தேர்தல் நடத்த 35 கோடி ரூபாய் வரை செலவிடப்படலாம் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Trending News