ஜெய்பீம் சர்சை: சூர்யா, ஜோதிகா மீது வன்னியர் சங்கம் வழக்கு

ஜெய்பீம் படம் தொடர்பாக தொடர்ச்சியாக பா.ம.வினர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு விருது வழங்கக்கூடாது என மத்திய அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2021, 02:42 PM IST
ஜெய்பீம் சர்சை: சூர்யா, ஜோதிகா மீது வன்னியர் சங்கம் வழக்கு title=

ஜெய் பீம் திரைப்பட சர்ச்சை விவகாரத்தில் சூர்யா, ஜோதிகா, 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் அமேசான் நிறுவனம் மீது வன்னியர் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது.

1990-களில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குறவர் இனத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் லாக்அப் கொடுமையால் கொல்லப்பட்டார். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஜெய்பீம் (Jai Bhim) படம், அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா இப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். ஆனால், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் உண்மைக்கு மாறாகவும், வன்னியர் சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

படத்தில் வில்லனாக காட்டப்படும் எஸ்.ஐ குருமூர்த்தி, காடுவெட்டி குருவின் பெயரை குறிக்கும் வகையில் இருப்பதாகவும், உண்மை சம்பவத்தில் அந்த எஸ்.ஐயின் பெயர் அந்தோணிசாமி எனவும் பா.ம.க குற்றம்சாட்டியுள்ளது. மேலும், எஸ்.ஐ வீட்டில் இருக்கும் காலண்டரில் அக்னிகலசம் இடம்பெற்றிருந்ததும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் காட்சிகள் வைக்கப்பட்டதாகவும் அவர்கள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பா.ம.க இளைஞர அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் திறந்த கடிதம் ஒன்றை சூர்யாவுக்கு (Actor Surya) எழுதினார். அதற்கு பதில் கடிதம் எழுதிய சூர்யா, விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை காட்டும் படத்தை, பெயர் அரசியலுக்குள் சுருக்கிவிட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். 

ALSO READ: ஜெய் பீம் படத்துக்கு வலுக்கும் ஆதரவு: பாம்புகளை ஏந்தி பழங்குடியினர் போராட்டம்

ஆனால், ஜெய்பீம் படம் தொடர்பாக தொடர்ச்சியாக பா.ம.வினர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு விருது வழங்கக்கூடாது என மத்திய அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும், அரசியல் களத்தில் சூர்யா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டங்களும், மிரட்டல்களும் தொடர்ந்து விடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இயக்குநர் ஞானவேலும் ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற காலண்டர் குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அக்னி கலசம் இடம்பெற்றது உள்நோக்கத்துடன் இல்லை என தெரிவித்துள்ள அவர், எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் எண்ணம் படக்குழுவுக்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அந்த காட்சிகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், யாரேனும் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், வன்னியர் சங்கம் சார்பில் சிதம்பரம் மாதிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா, 2டி என்டர்டெயின்மென்ட், இயக்குநர் ஞானவேல், அமேசான் (Amazon) நிறுவனம் மீது அவதூறு பரப்புதல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வன்னிய சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி வழக்கு தாக்கல் செய்துள்ளார். குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ALSO READ: ஜெய்பீம் பார்க்க ஆர்வம்; முதல்வரை காப்பி அடிக்கும் அமைச்சர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News